×

குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி கொடுமைப்படுத்தியதால் பாறாங்கல்லில் தலையை மோதி கணவன் கொலை மனைவி, கள்ளக்காதலன் கைது

காளஹஸ்தி, மே 30: சித்தூர் அருகே குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி கொடுமைப்படுத்தியதால் பாறாங்கல்லில் தலையை மோதி கணவனை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். சித்தூர் மாவட்டம், ராம சமுத்திரம் மண்டலம், ஏட்டவாக்கிலி பஸ் நிறுத்தத்தில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோயில் அருகில் தலையில் படுகாயங்களுடன் ஒருவர் சடலமாக கிடப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராமசமுத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் இறந்தவர் கர்நாடகா மாநிலம், னிவாசபுரம் தாலுகா, சோமயாஜுலு பல்லி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி(45) என்பது தெரியவந்தது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு புங்கனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்தின்பேரில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். தொடர்ந்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், ராமசமுத்திரம் அருகே இறந்த முனுசாமியின் மனைவி லட்சுமி தேவி என்பதும், அவருடன் வந்தவர் லட்சுமிதேவியின் கள்ளக்காதலன் நாராயணப்பா என்பதும் தெரியவந்தது. முனுசாமி மதுகுடித்துவிட்டு லட்சுமிதேவியை அடித்து துன்புறுத்தியதால் இருவரும் சேர்ந்து அவரை கொன்றது விசாரணையில் தெரிந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகாலமாக முனுசாமி மதுபான பழக்கத்திற்கு அடிமையாகி எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் லட்சுமிதேவி கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில் பெகலப்பல்லி கிராமத்தை சேர்ந்த நாராயணப்பா(55) என்கிற அஞ்சப்பாவுடன் லட்சுமிதேவிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. முனிசாமி லட்சுமிதேவியை கொடுமைப்படுத்தி வருவதை நாராயணப்பாவிடம் லட்சுமிதேவி முறையிட்டுவந்தார். இதனால் முனுசாமியை கொலை செய்ய இரண்டு பேரும் திட்டமிட்டனர்.

இதையடுத்து லட்சுமி தேவியும், நாராயணசாமியும் முனுசாமிக்கு மதுபானம் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்தூர் மாவட்டத்துக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து, ராம சமுத்திரம் மண்டலம், ஏட்டவாக்கிலி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோயில் அருகில் முனுசாமியும் நாராயணப்பாவும் மது குடித்தனர். பின்னர் நாராயணப்பா திட்டமிட்டபடி மதுபான மயக்கத்திலிருந்த முனுசாமியை பஸ் நிறுத்தம் நிழற்கூடத்திற்குள் அழைத்துச் சென்று பாறாங்கல்லால் தலையை மோதி கொடூரமாக கொலை செய்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து புங்கனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Kallakadalan ,Murder wife ,
× RELATED திராவகம் வீசப்பட்ட பெண்ணுக்கு...