திருச்செங்கோடு, மே 23: திருச்செங்கோடு அருகே சின்னதம்பிபாளையத்தில் நேற்று மாலை மழை பெய்த போது சூறைக்காற்று வீசியது. இதில் மரம், மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர் ஆகியவை சாய்ந்து விழுந்து சேதமடைந்தன.
திருச்செங்கோடு- சேலம் சாலையில் சின்னதம்பிபாளையம் கிராமம் உள்ளது. நேற்று காலை முதலே சின்னதம்பிபாளையத்தில் கடும் வெயில் சுட்டெரித்தது. மாலை 4 மணிக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சுமார் அரை மணிநேரம் மழை பெய்தது. இந்த மழையின் போது பலத்த காற்று வீசியதில் விவசாய நிலம் மற்றும் சாலையோரம் இருந்த தென்னை மரங்கள், புளியமரங்கள் முறிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மரம் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தது. இதில் கம்பிகள் அறுந்ததுடன், கம்பங்கள் சாய்ந்து போனது. சேலம் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே டிரான்ஸ்பார்மர் மற்றும் தென்னை மரம் ஆகியவை சாய்ந்தது. இதனால் சுமார் அரை மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்கம்பி அறுந்ததால் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.