×

தாமரை, புல்லட்சாமியால் டெல்லி தலைமை கொந்தளிப்பில் இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கரன்சி கொடுக்காத பெண் அதிகாரியை டிரான்ஸ்பர் என்ற பெயரில் பந்தாடிய அதிகாரி ‘புட்பால்’ மேட்ச் பார்த்து இருப்பாரோ…’’ என சொல்லி சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல, மாவட்ட உச்ச அதிகாரிக்கு ஊரக பிரிவுல, டைரக்ட்பேஸ் அசிஸ்டென்டாக ஒருத்தர் பணியாற்றி வர்றாராம். இவர் அதே பிரிவுல பணியாற்றி வர்ற ஊரக பிரிவு செயலாளருங்க, பிடிஓக்கள், டெபுடி பிடிஓக்கள்னு அவங்க வசதிக்கு ஏத்த மாதிரி, விரும்புற இடத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கி கொடுக்குறாராம். இதுக்காக கட்டுக்கட்டாக கரன்சி கைமாறுதாம். அதேசமயம், இவரை கவனிக்கலைன்னா, புட்பாலில் பந்தை எட்டி உதைப்பது போல, அதிகாரிகளை ஏதாவது ஒரு காரணம் சொல்லி தூக்கிடறாராம். இப்படித்தான், சோலையார் பேட்டை பிடிஓ அலுவலகத்துல டெபுடி பிடிஓவாக பணியாற்றிய பெண்ணுக்கு, டைரக்ட் பேஸ் அசிஸ்டென்ட்டோட டிரான்ஸ்பர், கரன்சி விஷயத்தில் மோதல் போக்கு ஏற்பட்டிருக்கு.இதனால அந்த பெண்மணியை மட்டும் கடந்த 6 மாசத்துல 3 இடங்களுக்கு டிரான்ஸ்பர் போடவெச்சு டார்ச்சர் செஞ்சிருக்காராம். இதனால அந்தப் பெண் டெபுடி பிடிஓ, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காராம். இதனால மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல இருக்குற அதிகாரிங்க டைரக்ட் பேஸ் அசிஸ்டென்ட் மேல ரொம்ப கோபத்துல இருக்காங்களாம். இது வெடிச்சு போராட்டமாக உருவாகும் நிலை ஏற்பட்டு இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கலெக்டரை சந்திக்க கட்டுப்பாடு என கொதித்து போன உள்ளாட்சி மன்ற நிர்வாகிகளை சமாளிப்பதற்குள் அதிகாரிகள் தண்ணீர் குடித்துவிட்டார்களாம்…’’ அப்படி என்ன நடந்துச்சு…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நாகர்கோவில் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் முன்னாள் தலைவர், கவுன்சிலர்களை அழைத்து நடத்தப்பட்டது. இதில் பேசிய கவுன்சிலர்கள் பலரும், பொதுமக்கள் பிரச்னை தொடர்பாக மக்கள் பிரதிநிதியாக நாங்கள் மாநகராட்சி ஆணையரை சந்திக்க அலுவலகத்திற்கு வந்தால், அங்குள்ள அதிகாரிகள் ஆணையரை நேரில் பார்க்கவிடுவதில்லை, மறுத்து விடுகிறார்கள். இதில் ஊராட்சிகளை சேர்த்தால் அவங்களை என்ன பாடுபடுத்துவாங்களோ… இந்த நிலையில் விரிவாக்கம் தேவைதானா என்று மக்கள் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர். கலெக்டர் முன்னிலையில் எழுந்த இந்த குற்றச்சாட்டு சற்று பரபரப்பை ஏற்படுத்தினாலும், ‘‘மாநகராட்சி ஆணையரை எப்போது சந்திக்கலாம் என்ற விவரம் இனி அலுவலகத்தில் ‘டிஸ்பிளே’ செய்யப்படும் என்று அப்போதைக்கு சமாளித்து வெற்றிகரமாக கூட்டத்தை மாவட்ட உயரதிகாரி முடித்து வைத்தாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இரு நூறு விவசாயிகளின் கரும்பு பயிர்கடன் தள்ளுபடியில் முறைகேடு செய்த கூட்டுறவு அதிகாரி கைது பயத்தில் இருக்கிறாராமே…’’ சிரித்தபடியே கேட்டார் பீட்டர் மாமா.‘‘நெற்களஞ்சிய மாவட்டத்தில் கடந்த இலை ஆட்சியில் கடைசி எழுத்தான சத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு செயலராக மூர்த்தியானவர் இருந்து வந்தார். விவசாயிகள் கரும்பு அறுவடை செய்து ஆலைக்கு அனுப்பும் போது கூட கடன் தொகையை விவசாயிகளிடம் வசூலித்துக்கொண்டு அரசுக்கு செலுத்தாமல் வராக்கடன் போல் கணக்கு காண்பித்து வந்துள்ளார். 2016 மற்றும் 2020 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகளின் லட்சக்கணக்கான கடன் தள்ளுபடி தொகையை முறைகேடாக கையாடல் செய்த பணத்தில் சொகுசு பங்களா கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் கூட்டுறவு செயலர்.. தற்போது ஆட்சி மாற்றத்தால் இந்த தகவல் கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் மூலம் வெளியில் கசிய தொடங்கியதாம். இதுகுறித்து விசாரணை செய்து விவசாயிகளை ஏமாற்றிய கூட்டுறவு செயலர் மீது நடவடிக்கை எடுத்து அபகரித்த தொகையை மீட்டுத்தர கோரி முதல்வரின் தனிப்பிரிவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் ஆதாரத்துடன் புகார் மனு அனுப்பியுள்ளார்களாம்.. தகவல் தெரிந்த கூட்டுறவு செயலர் எந்த நேரத்திலும் தன் மீது நடவடிக்கை பாயக்கூடும் என தூக்கத்தை தொலைத்து கிலியில் உள்ளாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தாமரையை கலங்கடிக்கும் புல்லட்சாமியால்… டெல்லி தலைமை கடும் எரிச்சலில் இருக்கிறதாமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தில் ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென அரசை திமுக வலியுறுத்தியது. ஆனால் புல்லட்சாமி தொடர்ந்து மவுனம் காத்தார். திமுக,  காங்கிரசாருடன், தாமரை தரப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு எதிராக ஆளும் அரசு செயல்படுவதாக கூறி திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியேறினர். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் புல்லட்சாமியின் ஆதரவு சுயேச்சைகளும் வெளிநடப்பு செய்தது, தாமரை தரப்புக்கு அதிர்ச்சியாக இருந்ததாம். அதோடு அன்றைய நிகழ்வில் புல்லட்சாமி கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் பாஜவின் கருத்தை ஆதரித்து பேசாமல் அமைதியாக அவையில் அமர்ந்திருந்ததை தாமரை எதிர்பார்க்கவில்லையாம். இதன் பின்னணியில் புல்லட்சாமி இருப்பதாக பாஜ சந்தேகிக்கிறதாம். பாஜவுக்கு புல்லட்சாமி  மறைமுக எச்சரிக்கையை விடுத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். சட்டசபையில் புல்லட்சாமியின் 10 எம்எல்ஏக்கள், பாஜவின் 6 எம்எல்ஏக்கள் என்ற அளவில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. புல்லட்சாமியை வீழ்த்திவிட்டு தன்னிச்சையாக ஆட்சியமைக்க முயற்சித்தால் எதுவும் நடக்காது என்பதை இந்த வெளிநடப்பின் மூலம் புல்லட்சாமி உணர்த்தியிருக்கிறார். எதிர்கட்சியின்  பலத்துடன் தனது ஆதரவு சுயேச்சைகளை காட்டி அமைதியாக இருக்குமாறு தாமரைக்கு  அறிவுறுத்தியிருப்பதாக கூறுகிறார்கள்… ராஜ்யசபா சீட்டு கேட்டு அழுத்தம் கொடுத்தால், எதிர்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பொதுவேட்பாளரை  நிறுத்தி செக் வைப்பேன் என புல்லட்சாமி சொல்லாமல் சொல்லியிருக்கிறார். மொத்தத்தில் டெல்லி பாஜவுக்கு புல்லட்சாமி கொடுத்திருக்கும் முதல் எச்சரிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது…’’ என்றார் விக்கியானந்தா. …

The post தாமரை, புல்லட்சாமியால் டெல்லி தலைமை கொந்தளிப்பில் இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Tamarai ,Bullatsamy ,Delhi ,wiki ,Yananda ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலை மகிளா கோர்ட் பரபரப்பு...