ஈரோடு, மே 22: ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 காதல் ஜோடிகள் தஞ்சமடைந்தனர். ஈரோடு பெரிய சேமூர் ஈ.பி.பி நகரை சேர்ந்த தங்கவேல் மகன் பிரபு(24). இவர் ஈரோடு நாராயணவலசில் உள்ள டையிங் மில்லில் வேலை செய்து வருகிறார். கோவை குனியமுத்துார் இடையர்பாளையத்தை சேர்ந்த சுப்ரமணி மகள் பவித்ரா(24), கோவை சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துமவனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இருவரும் ஓராண்டுக்கு முன் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆகினர். இருவரும் காதலித்து வந்த நிலையில் நேற்று முன் தினம் இருவரும் ஈரோடு ஈ.பி.பி. நகர் மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு நேற்று ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
இதே போல் ஈரோடு திருநகர் காலனி மாதவகாட்டை சேர்ந்த சுப்ரமணி மகன் மோகன்(22) ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மொபைல் கடையில் பணியாற்றி வந்தார். வெள்ளிதிருப்பூர் மரவாபாளையம் மன்னாதன் மகள் சிந்து(22) இருவரும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஒரு கல்லுாரியில் படித்த போது பழக்கம் ஏற்பட்டது. நேற்று முன் தினம் காலை வீட்டை விட்டு இருவரும் வெளியேறி சித்தோடு ஆயமேடு விநாயகர் கோயிலில் திருமணம் செய்து கொண்டு நேற்று ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதையடுத்து இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.