×

காளையார்கோவிலில் புதிய தாலுகா அலுவலகம் திறப்பு விழா எப்போது ?

காளையார்கோவில், மே 21: காளையார்கோவில் தாலுகாவாக அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்று வரை கருவூலம், நீதிமன்றம், தீயணைப்பு நிலையம் போன்ற எந்த வசதியும் இல்லாமல் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர். காளையார்கோவில் 2015ம் அண்டு தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இன்றுவரை அரசு கணக்கில் கட்டவேண்டிய பணத்திற்கு சிவகங்கையில் உள்ள மாவட்ட கருவூலத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. காளையார்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து மாவட்ட கருவூலம் செல்வதென்றால் இரண்டு பஸ் மாறி சிவகங்கையில் இருந்து ஆட்டோ மூலமாக செல்ல வேண்டும். இதனால் கால விரயம் ஏற்படுகிறது.

மேலும் தாலுகாவிற்கான சப்ஜெயில், நீதிமன்றம் மற்றும் இப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களுக்கு காளையார்கோவிலில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள சிவகங்கையில் இருந்து தீயணைப்பு துறை வரவேண்டிய நிலை உள்ளது. அதற்குள் எரிந்து முடிந்து விடுகிறது. இது போன்று அனைத்து தேவைகளுக்கும் சிவகங்கை செல்ல வேண்டிய நிலை உள்ளது. பல மாதங்களுக்கு முன்னால் கட்டிமுடிக்கப்பட்ட தாலுகா அலுவலகம் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. மேலும் புதிதாக கட்டப்படுள்ள தாலுகா அலுவலகத்தில் தாலுகா சம்பந்தப்பட்ட அனைத்துத் துறை அலுவலகங்களிலும் அமைத்துத்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : opening ,Taluk ,office ,
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...