×

முன்னாள் மத்திய அமைச்சர் ராசா சோமனூரில் வீதி வீதியாக பிரசாரம்

சோமனூர், மே 14: சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சோமனூர் பகுதிகளில், முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா தலைமையில் ஊர்வலமாக சென்று திமுகவினர் நேற்று வாக்கு சேகரித்தனர்.  சூலூர் தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து, திமுகவினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சூலூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்துப்பாளையத்தில், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தை, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா துவக்கி வைத்தார்.

இந்த பேரணி, ஆர்.கே.மில் ரோடு, சோமனூர் பேருந்து நிலையம், செல்வபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சென்றது. பேரணியின்போது, உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டி பெண்கள் கோஷமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.இதில் ஒருவர், குடுகுடுப்பைக்காரர் போல் வேடமிட்டு, குடுகுடுப்பையுடன்  ‘குறி’ சொல்வது போல், ஜி.எஸ்.டி வரி குறையணுமா… விவசாயம் விசைத்தறி தொழில் செழிப்படையணுமா… திமுகவுக்கு ஓட்டுப்போடுங்க என்று கூறிச் சென்றார்.  இந்த ஊர்வலத்தில், திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆனந்தன், திருப்பூர் மாநகர செயலாளர் நாகராஜ் மற்றும் சோமனூர் நிர்வாகிகள் நிர்யா மனோகரன், நாகராஜ், கங்காதரமூர்த்தி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Tags : Raja Samanur ,street street ,
× RELATED திருவாரூர் இளைஞர், மாணவர் பெருமன்ற...