×

கொலை திட்டம் தீட்டிய 3 ரவுடிகள் சுற்றிவளைத்து கைது

தண்டையார்பேட்டை, மே 14: கொருக்குப்பேட்டையில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி, கொலை திட்டம் தீட்டிய ரவுடிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கொருக்குப்பேட்டை கார்நேசன் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக ஆர்.கே.நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது, ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமாக 3 பேர் பதுங்கி இருப்பது தெரிந்தது. அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து 13 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்த பரத் (19), விக்னேஷ் (19), பாலாஜி (19) என்பதும், இவர்கள் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது.

மேலும், கார்நேசன் நகரை சேர்ந்த பிரபல ரவுடி கோட்டீஸ்வரன் (21) என்பவர், ஒருவரை கொலை செய்வதற்காக, இவர்களை ஒரு வீட்டில் தங்க வைத்து, கொலை திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 ரவுடிகளையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி கோட்டீஸ்வரனை தேடி வருகின்றனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தினால் தான், யாரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டினர் என்பது தெரியவரும், என போலீசார் தெரிவித்தனர்.

Tags : rounds ,
× RELATED கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை!