திண்டுக்கல், மே 14: திண்டுக்கல் மாவட்ட கால்நடை பன்முக மருத்துவமனையில் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களுக்கான ஆலோசனை கூட்டம் மற்றும் குடல்புழு நீக்க முகாம் நடந்தது. இதில் உதவி இயக்குனர் அப்துல்காதர், இணை இயக்குனர் முருகன், டாக்டர்கள் சாயிராபானு, அருண், பயிற்சி மாணவர்கள் ஓவியா, டிசோசாமானோஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.முகாமில் டாக்டர்கள் கூறியதாவது, ‘‘கோடை காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு போதிய அளவு தண்ணீர், உணவு கொடுக்க வேண்டும். வெயிலில் அதிக நேரம் கட்டி வைக்க கூடாது.
சற்று குளிமையான இடத்தில் அவற்றை உலா விட வேண்டும். நாய்களுக்கு 45வது நாளில் நோய் தடுப்பூசியும், 90வது நாளில் வெறிநாய் தடுப்பூசியும் போட வேண்டும். நோய் அறிக்குறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வர வேண்டும். டாக்டர்கள் ஆலோசனையின்றி, செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் தாங்களாகவே சென்று மருந்துக்கடைகளில் மாத்திரைகளை வாங்கி கொடுக்க கூடாது. இதனால் ஒவ்வாமை ஏற்பட்டு, செல்லப்பிராணிகள் அவதிப்படும். டாக்டர்கள் கொடுக்க கூறும் அளவில் மட்டுமே மருந்துகளை கொடுக்க வேண்டும். பாசத்தால் அதிகளவு கொடுக்ககூடாது’ என்றனர்.