×

கீழ்பவானி பாசன திட்ட தந்தை தியாகி ஈஸ்வரனுக்கு சிலை முதல்வர் அறிவிப்புக்கு கொங்கு விவசாயிகள் வரவேற்பு

ஈரோடு: கீழ்பவானி பாசன திட்டத்தின் தந்தை என்றழைக்கப்படும் தியாகி ஈஸ்வரனுக்கு ரூ.2.63 கோடி செலவில் திருவுருவச்சிலை அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதற்கு கொங்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய 3 மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வரும் கீழ்பவானி பாசன திட்டம் கொண்டு வர முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவர் சுதந்திர போராட்ட தியாகி எம்.ஏ. ஈஸ்வரன். இவர் சுதந்திர போராட்ட தியாகி என்பதோடு, ஈரோடு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சுமார் 16 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். கீழ்பவானி பாசன திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன பெற காரணகர்த்தாவாக இருந்ததால் கீழ்பவானி பாசனத்தின் தந்தை என்று தியாகி ஈஸ்வரன் விவசாயிகளால் போற்றப்பட்டு வருகின்றார். எனவே தியாகி ஈஸ்வரனுக்கு பவானிசாகர் அணை பூங்காவில் திருவுருவச்சிலை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாசன விவசாயிகள் அரசிடம் வலியுறுத்தி வந்தனர். ஆனாலும் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், தியாகி ஈஸ்வரனை இன்றைய தலைமுறையினர் அவரது செயல்பாடுகள், சேவையை தெரிந்து கொள்ளும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் அவரது திருவுருவ சிலை மற்றும் அரங்கம் ஆகியவை ரூ.2.63 கோடி செலவில் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது கொங்கு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.தமிழக விவசாயிகள் சங்கம் (நாராயணசாமி நாயுடு பிரிவு) மாவட்ட தலைவர் பெரியசாமி கூறுகையில், ‘‘கீழ்பவானி வாய்க்கால் பாசன நீரை பயன்படுத்தி நெல், கரும்பு, மஞ்சள், வாழை, எள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. விவசாயிகள் வாழ்வாதாரத்திற்கு கீழ்பவானி வாய்க்கால் அமைய உறுதுணையாக இருந்த தியாகி ஈஸ்வரனை நினைவு கூரும் வகையிலும், அவரது தியாகத்தினை போற்றும் வகையிலும், பவானிசாகர் அணையில் நினைவு தூண் அமைக்க பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்பொழுது தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தியாகி ஈஸ்வரனுக்கு ரூ.2.63 கோடி மதிப்பீட்டில் திருவுருவ சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளதற்கு பாசன விவசாயிகள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுப்பு கூறுகையில், ‘‘நான் 5 ஏக்கர் நிலத்தில் தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை கீழ்பவானி வாய்க்கால் பாசன நீரை கொண்டு விவசாயம் செய்து வருகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் சட்டபேரவை கூட்டத்தில் பவானிசாகர் அணை உருவாக காரணமாக இருந்த தியாகி ஈஸ்வரன் திருவுருவ சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பதற்கு விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்றார். தியாகி ஈஸ்வரனின் உறவினரான பேராசிரியர் ரமேஷ் கூறுகையில், ‘‘ஈரோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், எனது உறவினருமான தியாகி ஈஸ்வரன் சேவையை கவுரவிக்கும் வகையில், ரூ.2.63 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்த, தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாகவும், ஈரோடு மக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்….

The post கீழ்பவானி பாசன திட்ட தந்தை தியாகி ஈஸ்வரனுக்கு சிலை முதல்வர் அறிவிப்புக்கு கொங்கு விவசாயிகள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Kongu ,Chief Minister ,Tyagi Iswaran ,Erode ,Tamil Nadu ,Tyagi Easwaran ,
× RELATED பெருந்துறை கொங்கு பொறியியல்...