அருப்புக்கோட்டை, மே 9: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மழை வேண்டி யாகம் நடத்த அறிவுறுத்தப்பட்டது. இதனையொட்டி அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில், மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. ஓதுவார்களை கொண்டு மழை வேண்டுதல் பதிகம் ஓதப்பட்டது. வருண காயத்ரி மந்திர பராயாணம் செய்தல், மழை வேண்டி பதிகங்கள் ஓதுதல், கணபதி பூஜை, புண்ணியாக வாசனம், சப்த நதிகளுக்கு பூஜை செய்யும் யாகம், வர்ணனுக்கு சிறப்பு பூஜை மற்றும் சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஆராதனை மற்றும் தீபாரதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மகேந்திர பூபதி சிறப்பாக செய்திருந்தார்.