ஊட்டி, மே 9: ஊட்டி ேமரிஸ்ஹில் பெட்டாம்ஸ் சாலையோரத்தில் ேபாடப்பட்ட கான்கீரிட் தளம் மழையில் அடித்து செல்லப்பட்டது. இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மேரிஸ்ஹில் பகுதியில் இருந்து பிங்கர்போஸ்ட் செல்லும் சாலைக்கு செல்ல பெட்டாம்ஸ் சாலை உள்ளது. நகராட்சி கட்டுபாட்டில் உள்ள இச்சாலையில் கூட்ஷெட் பகுதியில் இருந்து வர கூடிய வாகனங்கள் ஹில்பங்க் செல்லாமல் பிங்கர்போஸ்ட் செல்ல இச்சாலையை அதிகம் பயன்படுத்துவார்கள். இப்பகுதியில் சாலையோரம் மழைநீர், கழிவுநீர் வழிந்தோட வசதியாக கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் கான்கீரிட் வடிகால் தளம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் கான்கீரிட் தளம் அடித்து செல்லப்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனை நகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் உள்ளது. இதனால் மேரிஸ்ஹில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். எனவே ஊட்டியில் மழை நின்ற பிறகு மீண்டும் கான்கீரிட் வடிகால் தளம் அமைத்து சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.