நாகர்கோவில், மே 9: அழகியபாண்டியபுரம் மேல்கரை கிராமம் அருள்மிகு தேவி, பூதேவி சமேத ஸ்ரீதிருவேங்கடத்தப்பர் திருக்கோயில் (கீழ கோயில்) அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகா சமேத குலசேகர உடைய நயினார் கோயில் முதல் வருஷாபிஷேக விழா நாளை (10ம் தேதி) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று (9ம் தேதி) மாலை சாயரட்சை தீபாராதனையும், 6.30 மணிக்கு மேல்கரை கிராமம் அழகிய நம்பி பஜனை குழுவினரின் பக்தி பஜனையும், இரவு 8 மணிக்கு தீபாராதனையும் நடைபெறுகிறது.
நாளை காலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாஜனம், பஞ்சகவ்ய பூஜை, வேதிகா அர்ச்சனை, வேதமந்திர ஜெபம், காலை 7 மணிக்கு மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், மூர்த்தி ஹோமம், விசேஷ திரவியாஹூதி, வஸ்திராஹூதி, மகா பூர்ணா ஹூதி, தீபாராதனை ஆகியன நடைபெறுகின்றன. காலை 10 மணிக்கு அஷ்டாபிஷேகம், கலாசாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு மங்கள இசை, வேதநாராயண பஜனை குழுவின் பஜனை, சாயரட்சை தீபாராதனை, இரவு 8 மணிக்கு கருடசேவை, சுவாமி கருட வாகனத்தில் பவனி வருதல் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திருவேங்கடத்தப்பர் பக்தஜன சேவாசங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.