×

ஈரோட்டில் செக்ஸ் புகாரில் சிக்கிய ரியல் எஸ்டேட் அதிபர் மீது மேலும் 3 பிரிவுகளில் வழக்கு

ஈரோடு, மே 8:  செக்ஸ் புகாரில் சிக்கிய ரியல் எஸ்டேட் அதிபர் மீது பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் 5 நாட்களுக்கு பிறகு மேலும் 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு வில்லரசம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆர்கே என்ற ராதாகிருஷ்ணன்(37). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் பல்வேறு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி வந்ததாக புகார் எழுந்தது.

இவரால் பாதிக்கப்பட்டதாக கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 26ம் தேதி ஈரோடு மகளிர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  இதையடுத்து கடந்த 2ம் தேதி ஈரோடு வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மனைவி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் எனக்கு திருமணம் ஆகி ஒரு மகன், மகள் உள்ளனர். என் கணவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால், ராதாகிருஷ்ணன் என் கணவருக்கு மது வாங்கி கொடுத்து, அவருக்கு நண்பரானார். கணவர் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்து என்னையும், எனது  குழந்தையையும் பார்த்துக் கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதை செல்போனில் வீடியோ எடுத்து வைத்து மிரட்டினார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறி இருந்தார்.

இந்த புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவிட்டார். அதன்பேரில், விசாரணை நடத்தி ஏற்கனவே சிறையில் உள்ள ராதாகிருஷ்ணன் மீது 5 நாட்களுக்கு பிறகு நேற்று கற்பழிப்பு, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே, தற்போது ராதாகிருஷ்ணன் மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags : real estate agent ,Erode ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...