×

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க போதிய ஒத்துழைப்பு வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

புதுக்கோட்டை, மே 8: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை புதுக்கோட்டை மாவட்டத்தில் முற்றிலும் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி  தலைமை வகித்து பேசியதாவது:
சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எரியக் கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு, இதன் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில்  உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் தங்கள் பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, அதனை முறையாக சேகரித்தும், இவ்வாறு சேகரிக்கப்பட்ட  பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கோயில் வளாகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது அறிவிப்பு பலகைகள் வைக்கவும், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணிப்பை மற்றும் மூங்கில் தட்டுகளை உபயோகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களிடம் பிளாஸ்டிக் உபயோகத்தின் மாற்றுப் பொருள் பயன்பாட்டை விளக்கமாக எடுத்துரைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க தொடர்ந்து கடைகளுக்கு செல்லும் போது துணிப்பைகள் எடுத்து செல்லுதல் போன்ற பழக்கங்களை மேற்கொண்டு போதிய ஒத்துழைப்பு அளித்து பிளாஸ்டிக் பயன்பாடற்ற மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தை திகழ செய்ய வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ