மஞ்சூர், மே. 7:மஞ்சூர் அருகே கம்பி வேலியில் சிக்கிய கரடியை வனத்துறையினர் மீட்டனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற வனப்பகுதியில் தற்போது கடுமையான வறட்சி நிலவி வருகிறது.இதனால், குடிநீர் மற்றும் இரை தேடி யானைகள், சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் இடம் பெயர்ந்து வருகிறது. இவ்வாறு இடம் பெயரும் விலங்குகள் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்துவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நேற்று காலை மஞ்சூர் அருகே உள்ள கீழ்குந்தா பகுதியில் குடியிருப்புகளை ஒட்டிய தேயிலை தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியில் கரடி ஒன்று சிக்கி வெளிவர முடியாமல் தவித்து கொண்டிருந்தது.
இதை கண்ட அப்பகுதியினர் வனத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், குந்தா ரேஞ்சர் சரவணன் மேற்பார்வையில் வனவர் ரவிக்குமார் மற்றும் வனத்துைறயினர் சம்பவ இடத்துக்கு சென்று கம்பி வேலியில் சிக்கிய கரடியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் கம்பி வேலியில் இருந்து கரடி பத்திரமாக மீட்கப்பட்டது. இதை தொடர்ந்து கரடி அருகில் இருந்த வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.