கீழ்வேளூர், மே 3: கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன் நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடப்பதால் வேகத்தடைக்கு முன்னும், பின்னும் வெள்ளைகோடுகள் வரைய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் வட்டாட்சியர் அலுவலகத்தை கருத்தில் கொண்டு வேகதடை அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக சாலையில் வேகத் தடை அமைத்தால் வேகத்தடை உள்ளதை தெரியப்படுத்தும் வகையில் வேத்தடைக்கு இரண்டு பக்கமும் வேகத்தடை உள்ளதற்கான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அதேபோல் வேகத்தடைக்கு குறிப்பிட்ட தொலைவிற்கு முன் வெள்ளை கோடும், வேகத்தடைக்கு அருகேயும், வேகத்தடையின் மீதும் வெள்ளை கோடுகள் வரையப்பட வேண்டும். ஆனால் கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வேகத்தடையில் எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகனங்கள் சென்றும் வரும்போது வேத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக இரண்டு சக்கர வாகனத்தில் வருபவர்கள் அதிகஅளவில் விபத்துக்குள்ளாகும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. கார் போன்ற நான்கு சக்கர வாகனத்தில் வேகதடை தெரியாததால் வேகத்தடையின் மீது வேகமாக செல்லும் போது வாகனத்தின் சக்கர பகுதியில் உள்ள பாகங்கள் உடைந்து சேதத்தை ஏற்படுத்துகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் வேகத்தடைகள் உள்ளதை எச்சரிக்கை அறிவிப்பு செய்யும் வகையில் அறிவிப்பு பலகை அமைப்பதோடு, வேகத்தடை உள்ள இடத்தில் வெள்ளை கோடுகள் வரையவேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொது மக்களும் எதிர்பாக்கின்றனர்.