கரூர், மே 3: கரூர் சிவசக்தி நகர் பகுதிகளுக்கு செல்லும் மின்கம்பம் எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது குறித்து கண்காணித்து சீரமைக்கப்படுமா? என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கரூர் மில்கேட் அருகே சிவசக்தி நகர் 1 முதல் 5 வரை தெருக்கள் உள்ளன. ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில், தனியார் தொழில் நிறுவனங்களும் உள்ளன.இந்த பகுதிகளுக்கு மின்சப்ளை வழங்குவதற்காக காட்டுப்பகுதியின் வழியாக மின்கம்பம் செல்கிறது. அதில், ஒரு இரும்பிலான மின்கம்பம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தாழ்வாக, எந்த நேரமும் விழும் நிலையில் உள்ளது. இதில், இருந்து மின்சாரம் கடத்தி செல்லும் கம்பிகளும் தரையோடு தரையாக தாழ்ந்த நிலையில் உள்ளன. இதனால், பல்வேறு ஆபத்துக்கள் ஏற்பட அதிகளவு வாய்ப்புகள் உள்ளன. இதனை சீரமைத்து தர வேண்டும் என பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.எனவே, விழும் நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தினை அதிகாரிகள் உடனடியாக சரி செய்திடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.