கும்பகோணம், மே 1: பந்தநல்லூர் கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் கொள்ளை நடந்து வருகிறது என்று திருவிடைமருதூர் தாசில்தார் சிவக்குமாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தாசில்தார் சிவக்குமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், விஏஓக்கள் பிரபு, சபரிகண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வேட்டைமங்கலம், நரிமுடுக்கு கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் ஏற்றி கொண்டு வந்த 4 மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது வருவாய்த்துறையினருக்கு தெரியவந்தது. அப்போது மாட்டு வண்டி இயக்கி வந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பின்னர் 4 மாட்டுவண்டிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து பந்தநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைதொடர்ந்து மேல் நடவடிக்கை எடுப்பதற்காக ஆர்டிஓவிடம் பரிந்துரைக்கப்பட்டது.
பாபநாசம்: பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் போலீசார் ரோந்து சென்றனர். நல்லிச்சேரியில் ரோந்து சென்றபோது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது லோடு ஆட்டோவில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதேபோல் தென்னங்குடி முனியாண்டவர் கோயில் அருகில் சென்றபோது அவ்வழியாக அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.