ஆண்டிபட்டி, மே 22: ஆண்டிபட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்கள் வறட்சியால் காய்ந்து வருகிறது. இதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி ஒன்றியம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். ஆண்டிபட்டியை சுற்றியுள்ள கணேசபுரம், ஜி.உசிலம்பட்டி கணவாய்ப்பட்டி, தெப்பம்பட்டி, ராஜதானி பழையகோட்டை, கதிர்நரசிங்கபுரம், வரதராஜபுரம், டி.சுப்புலாபுரம், ஏத்தகோயில், கோவில்பட்டி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல நூறு ஏக்கரில் தென்னை சாகுபடி செய்துள்ளனர். இப்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் ஆழ்துளை கிணறுகளில் நீர் சுரப்பு குறைந்து விட்டதால் பல நூறு தென்னை மரங்கள் காய்ந்து வருகிறது. இதனால் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக, இப் பகுதியில் போதிய மழை இல்லை. ஆனால் விவசாயிகள் நாங்கள் விவசாய தொழிலைத் தவிர எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. பல இடங்களில் கடன்களை வாங்கி ஆழ்துளை கிணறுகள் அமைத்து விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் நிலத்தடி நீர்மட்டம் நாள்தோறும் சரிவை நோக்கியுள்ளதால், தோட்டத்தில் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் வற்றி விட்டதால் சாகுபடி செய்யப்பட்டுள்ள பல நூறு தென்னை மரங்கள் பயன் தரும் நிலையில் காய்ந்து வருகிறது. இதனை அரசாங்கம் வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்துறையினர் மூலம் மரங்களை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.