சேத்தியாத்தோப்பு, ஏப். 30: கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கூடலையாத்தூர் ஊராட்சி, இக்கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகளும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தின் மைய பகுதியில் 2012-13 ஆம் ஆண்டு ஊரக சுகாதாரத் திட்டத்தின் கீழ் கழிவறை கட்டிடம் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. தற்போது இந்த கழிவறை கட்டிடத்தை சுற்றி புதர் மண்டியுள்ளதால் விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இந்த கழிவறை கட்டிடம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இல்லை. குடிநீர் வசதியும் இல்லை என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதை ஊராட்சி நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை, இதுகுறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனுகொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த கழிவறை கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் இதனருகே உள்ள குடிநீர் தொட்டியை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.