திருவாரூர், ஏப். 26: உயர் நீதிமன்ற உத்தரவுபடி இளநிலை உதவியாளர் தேர்வினை உடனடியாக நடத்திட கோரி திருவாரூரில் நேற்று டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி இளநிலை உதவியாளர் தேர்வினை காலதாமதமின்றி உடனடியாக நடத்திட வேண்டும். விண்ணப்பித்தவர்களின் விபரங்களை இணையதளத்தில் உடனடியாக வெளியிட வேண்டும். தேர்வுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள், தேர்வுக்கான தேதி மற்றும் தேர்வு மையங்கள் போன்ற விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும். தேர்ச்சி மற்றும் மதிப்பெண் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
நீதிமன்றம் பொது பணியிட மாறுதலுக்கான தடை ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதை கணக்கில் கொண்டு உடனடியாக பொது பணியிட மாறுதல் அறிவிப்பை வெளியிட வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள கடைகளில் விற்பனை அடிப்படையில் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்திட வேண்டும். பணியிட மாறுதலுக்கு ஊழியர்களின் பணி மூப்பினை கணக்கில் கொள்ள வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் பாப்பையன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் லெனின், பொருளாளர் அசோக்ராஜ் மற்றும் சிஐடியு மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதி, துணைத் தலைவர் பழனிவேல் மற்றும் பொறுப்பாளர்கள் பாண்டியன், வைத்தியநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.