×

குடியிருக்கும் வீட்டை எழுதி தராததால் ஆத்திரத்தில் தாயை வெட்டி கொன்றேன்

பள்ளிபாளையம், ஏப்.26: குமாரபாளையம் அருகே மூதாட்டி கொலையில் அவரது மகன் கைது செய்யப்பட்டார். குடியிருக்கும் வீட்டை தர மறுத்ததால் ஆத்திரமடைந்து தாயை வெட்டி கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். குமாரபாளையம் அருகே அல்லிநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்லமாள்(75). இவரது கணவர் பெருமாள்(80). இவர்கள், நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்களது மூத்தமகன் செல்லமுத்து(60) என்பவர் அங்கு வந்துள்ளார். பெற்றோரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டி விட்டு ஓடிவிட்டார். இதில், செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பெருமாள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிந்து விசாரித்தார். பெற்றோரை வெட்டி விட்டு தப்பியோட முயன்ற செல்லமுத்துவை மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீசில் செல்லமுத்து அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு: குடும்பத்தோடு கூலி வேலைக்கு சென்று கஷ்டப்பட்டு வருகிறேன். குடியிருக்க ஓலை வீடுதான் உள்ளது. எனது சந்தை பெருமாள் சிமெண்ட் ஆலைக்கு வேலைக்கு சென்று ஓய்வு பெற்றவர் ஆவார். ஓய்வின்போது கிடைத்த பணத்தை எனது தங்கை தங்கமணிக்கும், தம்பி மணிக்கும் கொடுத்துள்ளார்.

ஆனால், எனக்கு மட்டும் எதுவும் கொடுக்கவில்லை. இதனால், எனது பெற்றோர் குடியிருந்து வரும் ஓட்டு வீட்டையாவது எனது பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி கேட்டு வந்தேன். ஆனால், அவர்கள் எனது விருப்பத்தை ஏற்காமல் அலட்சியப்படுத்தி வந்ததால் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டினேன். இவ்வாறு செல்லமுத்து வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட செல்லமுத்துவை திருச்செங்கோடு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : residence ,house ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...