×

அழிவின் விளிம்பில் இலுப்பை மரம்

செந்துறை, ஏப்.25: இலுப்பை மரம் மேகக்கூட்டங்களை தருவித்து மழையை வரவழைக்கும் குணம்கொண்டது. இலுப்பையின் தாயகம் தமிழகம் தவிர நேபாளம், இலங்கை மற்றும் மியான்மரிலும் காணப்படுகிறது. நம் நாட்டில், ஜார்கண்ட், குஜராத், மத்தியபிரதேசம், பீகார், ஒரிஸ்ஸா, கேரளா மற்றும் தமிழ்நாட்டிலும் உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஏரிக்கரையில் தோப்பாகவும், நீர்வழித்தடங்களிலும் இம்மரங்கள் காணப்படுகின்றன. இது சப்போட்டா மரத்தின் வகையை சேர்ந்தது.

தமிழகத்தில் 1950ம் ஆண்டு வாக்கில் 30,000 மரங்களுக்கும் அதிகமாக இருந்தன. ஆனால் 2015ம் ஆண்டு கணக்கின்படி 10,000 மரங்களுக்கும் குறைவாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இலுப்பை ஒரு வெப்ப மண்டல தாவரம். வறண்ட நிலங்களிலும் எளிதாக வளரக்கூடியாது. இலுப்பையின் ஆயுட்காலம் நானூறு ஆண்டுகளுக்கு மேல், சுமார் அறுபது அடிக்கும் மேல் வளரக்கூடியது. இலுப்பை மரம் அதிகமான மருத்துவ குணமுடைய தாவரம். இதன் இலை, பூ, விதை, பட்டை, எண்ணெய், புண்ணாக்கு ஆகிய அனைத்தும் சங்க காலம் தொட்டு இன்று வரையிலும் மருத்துவத்திற்கான பயன்பாட்டில் உள்ளது. இதன் பருவகாலம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை. முளைத்த நாளிலிருந்து பத்து வருடங்களுக்கு பின்னர்தான் பலன் தரும்.” ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை” என்பது பழமொழி.

ஒரு வருடத்திற்கு இருநூறு கிலோவிலிருந்து முன்னூறு கிலோ பூவும், இருபது முதல் இருநூறு கிலோ வரை இலுப்பை விதையும் கிடைக்கும். ஒரு கிலோ விதையிலிருந்து முன்னூறு மில்லி லிட்டர் எண்ணெய் எடுக்கலாம். ஒரு டன் பூவிலிருந்து எழுநூறு கிலோ சர்க்கரையும், நானூறு கிலோ ஆல்கஹாலும் தயாரிக்கலாம். இலுப்பை ஆல்கஹால் ஒரு மாற்று எரிபொருளாக பயன்படக்கூடியது. இலுப்பை எண்ணெய் ஒரு வலி நிவாரணி, சமையலுக்கும் இது பயன்படுகிறது.

இது தவிர பாம்பு விஷம், வாத நோய், சக்கரை வியாதி, சளி, இருமல் மூலநோய், வயிற்றுப்புண், சுவாச கோளாறு, காயம் ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. இலுப்பைப் பூ ஊறுகாய் காசநோய்க்கு அரு மருந்தாகும். விறகாக மட்டுமின்றி அறைக்கலன்கள், மரச்சாமான்கள், சமையல் பாத்திரங்கள், வண்டிச்சக்கரங்கள், மரப்பெட்டிகள் போன்றவற்றின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உப்புநீரை தாங்குவதால் இம்மரம் படகுகள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. வணிகரீதியாக ஒரு ஏக்கருக்கு சுமார் இருநூறு இலுப்பை மரங்கள் வரை நட்டு, ஆண்டொன்றுக்கு ஆயிரத்தி ஐநூறு லிட்டர் எண்ணெய் எடுத்தால் அதன் மூலமாக மூன்று லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இது தவிர பூ, பட்டை, சர்க்கரை, புண்ணாக்கு, சாராயம், சீகைக்காய் ஆகிய அனைத்துமே பணம்தான்.

ஒரு கனஅடி மரம் ஆயிரம் ரூபாய் வரை விலை கொண்டது. அறுபது ஆண்டுகள் கழித்து ஒரு மரம் சுமார் ஐந்து லட்சத்திற்கு மேல் மதிப்புடையதாகிறது. இதை ஒரு பணம் காய்க்கும் மரம் என்று கூறினால் அது மிகையாகாது. அரியலூர் மாவட்டத்தில் ஏரிகரைகளில் தோப்பாகவும், நீர் வழிப்பாதைகளிலும் ஏராளமான இலுப்பை மரங்கள் உள்ளது. இந்த வகை மரங்களை வளர்ப்பதற்கு யாரும் ஆர்வம் காட்டாததால் இலுப்பை மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதனால் அழிவின் விழிம்புக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வவ்வாலுக்கு மிகவும் பிடித்தமான உணவு இலுப்பை பழங்கள்தான். இலுப்பையின் அழிவு வவ்வாலின் அழிவு. வவ்வாலின் அழிவு கொசுவின் வளர்ச்சி. கொசுக்களின் வளர்ச்சி வியாதிகளின் வளர்ச்சி. எனவே அரசு சார்பிலும், பொதுமக்களும் இலுப்பை மரங்களை வளர்ப்பதால் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் காக்கப்படும்.

Tags :
× RELATED பாடாலூர் செல்போன் கடையில் திருட்டு