காங்கயம், ஏப். 24: காங்கயம் அருகே உள்ள நூலக கட்டிடம் பயன்பாடின்றி பழுதடைந்து வருவதால், அதை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கயம் அருகே பொத்தியாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அவிநாசிபாளையம்புதூர் உள்ளது. இங்கு அரசு பள்ளியை ஒட்டி கடந்த 2009-2010 நிதியாண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் தொடர்ந்து பயன்படுத்தப்படாமல் கிடப்பதால், கட்டிடத்தை சுற்றிலும் புல், பூண்டுகள் முளைத்தும், கட்டிடத்தில் ஆங்காங்கே சுவர்கள் சேதமடைந்தும் காட்சியளிக்கிறது. பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நூலகம் தற்போது பயன்பாட்டுக்கு இல்லாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நூலக கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.