பெரியகுளம், ஏப்.21: பெரியகுளம் அருகே 8 கி.மீ தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கொடைக்கானல் மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த அருவியில் மேற்கு தொடர்ச்சி மலைவனப்பகுதி மற்றும் கொடைக்கானலில் கனமழை காரணமாக நீர் வரத்து இருக்கும். கும்பக்கரை அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி அனைத்து பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை இருக்கும். கடந்த ஜன.28ம் தேதி முதல் நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் அருவி வறண்டு காணப்பட்டது. இதனால் கும்பக்கரை அருவிக்கு சுற்றுலாபயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். கடந்த 3 நாட்களாக மேற்குதொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் மாலை மற்றும் இரவுநேரத்தில் பரவலாக பெய்த கோடை மழையினால் நேற்று இரவு முதல் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து துவங்கியது. நேற்று மாலை மற்றம் இரவில் பரவலாக கனமழை பெய்ததால் இரவு முதல் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் அருவிக்கு வரும் நீர்வரத்து சீராகும் வரை நீர் இன்றி விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் கும்பக்கரை அருவியில் சுற்றுலாபயணிகள் குளிக்க தடை விதித்தும் உள்ளதாக தேவதானப்பட்டி வனத்துறையினர் தெரிவித்தனர்.