கீழ்வேளூர், ஏப்.19: நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் அத்திப்புலியூர், மோகனூர் ஊராட்சியின் தேர்தல் நாளான நேற்று 100 நாள் வேலை நடைபெற்றதால் ஊராட்சி செயலாளர், பணித்தளப்பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் அத்திப்புலியூர் ஊராட்சியில் வேம்படி மாரியம்மன் கோயில் பகுதியில் 100 நாள் வேலை நடைபெற்றுள்ளது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்துள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற திமுகவினர் வேலையை தடுத்து நிறுத்தி வேலை செய்தவர்களை வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க அனுப்பி வைத்தனர்.
அதேபோல் கீழ்வேளூர் ஒன்றியம் மோகனூர் ஊராட்சியில் புலவனூர் கிராமத்தில் 100 நாள் வேலை தொழிலாளர்கள் வேலை செய்துள்ளனர். காலை 11 மணி வரை புலவனூரை சேர்ந்த மக்கள் வாக்களிக்க வராததால் சந்தேகம் அடைந்த அரசியல் கட்சியினர் புலவனூர் சென்று பார்த்தபோது அங்கு 100 நாள் வேலை நடைபெற்று கொண்டு இருந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதி பணிதளப் பொறுப்பாளரை அரசியல் கட்சியினர் கேட்டபோது சரியான பதில் சொல்லவில்லை. மேலும் ஊராட்சி செயலாளரை கேட்டுள்ளனர்.
அவரும் எனக்கு தெரியாது இன்று(நேற்று) 100 நாள் வேலை செய்ய நான் சொல்லவில்லை என்று மழுப்பலாக பதில் தெரிவித்தார். 100 நாள் வேலையை தடுத்து நிறுத்தியதையடுத்து புலவனூர் மக்கள் 12 மணிக்கு மேல் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தனர். தேர்தல் நேரத்தில் பொது வேலை நிறுத்தம் செய்ய அரசு அறிவித்த நிலையில் கூலி தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு கொடுத்து வேலை செய்ய சொன்ன ஊராட்சி செயலாளர்கள், பணித்தளப் பெறுப்பாளகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.