×

இன்று மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் ஜனநாயக கடமையை நிறைவேற்ற மறக்காதீங்க...

இந்தியாவில் 7 கட்டங்களாக 17வது மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்டமாக தேர்தல் முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக தமிழகம் உட்பட சில மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. ஓட்டு போடுவது உங்களது உரிமை. எனவே, இன்று உங்கள் ஓட்டுகளை கட்டாயம் பதிவு செய்து விடுங்கள். ‘என்னத்தை போட்டு... என்னத்தை பண்ணப்போறோம்’ என்று பேசாமல் இருந்து விடாதீங்க...!தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்துவதால் மக்கள் வெளியில் வரவே அஞ்சுகின்றனர். பகல் நேரங்களில் பரபரப்பான சாலைகள் கூட வெறிச்சோடி கிடக்கின்றன. ஆனாலும் ஓட்டு போடுவது மிகவும் அவசியம் அல்லவா? வெயிலுக்கு பயந்து வீட்டிலேயே இருந்திடாதீங்க. இன்று காலை 7 மணிக்கே சென்று விடுங்கள். இதன்மூலம் வெயிலின் தாக்கத்தில் இருது தப்பிக்கலாம். கூடுமானவரை குடைகளை எடுத்து செல்வது சிறந்தது. நீண்ட நேரம் வெயிலில் நிற்கும் சூழல் ஏற்பட்டால் சோர்வடையவோ, மயக்கம் அடையவோ வாய்ப்புண்டு. இதுபோன்ற நேரங்களில் பாதுகாப்பாக உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். நீரிழிவு நோயாளிகள் பிஸ்கட் மற்றும் சிறு பாட்டில்களில் தண்ணீர் எடுத்து செல்லவும் மறக்க வேண்டாம். மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிப்பதற்கான வசதிகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
உங்கள் ஓட்டுகளை பதிவு செய்ய செல்லும்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னங்களை கவனத்துடன் பார்வையிடுங்கள். உங்களுக்கு பிடித்தமான வேட்பாளர் பெயர், சின்னத்துடன் இருக்கும். இதில் நீலநிற பட்டனை அழுத்துங்கள். நீங்கள் வாக்களித்த வேட்பாளரின் சின்னத்திற்கு எதிரே சிகப்பு நிற விளக்கு ‘பீப்’ என சவுண்டுடன் எரியும். இதுதான் உங்கள் வாக்கு பதிவானதற்கான அடையாளம்.
ஆவணங்கள் அவசியம்ஓட்டளிக்க செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், மாநில, மத்திய அரசு பணிகளின் அடையாள அட்டை, பொதுத்துறை நிறுவன அடையாள அட்டை, வங்கிகள், அஞ்சலகங்களின் பாஸ்புக், பான்கார்டு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட வேலை அட்டை, ஹெல்த் இன்சூரன்ஸ் கார்டு, பென்சன் அடையாள அட்டை, எம்பி, எம்எல்ஏ அடையாள அட்டை, ஆதார் கார்டு இவற்றில் ஏதேனும் ஒன்றை காட்டி தேர்தலில் வாக்குப்பதிவு செய்யலாம். மேலும், உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப்பையும் கட்டாயம் எடுத்து செல்லவும்.தேர்தலின்போது கட்சியினரின் அத்துமீறல், பணம் கொடுத்தல், கள்ள ஓட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை cVIGIL என்ற ஆப் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு நீங்கள் தெரியப்படுத்தலாம். உங்கள் ஆன்ட்ராய்ட் போனில் இந்த ஆப்பை டவுன்லோடு செய்து விதிமீறலை வீடியோ, போட்டோ எடுத்து நேரடியாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பலாம்.என்ன ஓகேயா? மறக்காதீங்க... உடனே ஓட்டளிக்க கிளம்புங்க...!

Tags : Lok Sabha ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...