காளையார்கோவில், ஏப்.18: காளையார்கோவில் அருகில் உள்ள மூர்த்தி நகர், சோமசுந்தர நகர் செல்லும் தார்ரோடு தற்போது மண் ரோடாக மாறி விட்டதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.காளையார்கோவில் அருகில் தியேட்டர் எதிர்புரம் மூர்த்தி நகர், சோமசுந்தர நகருக்கு செல்லும் தார்ரோடு சில வருடங்களுக்கு முன்னால் போடப்பட்டது. தற்போது தார் இருந்த இடமே தெரியாமல் ஜல்லிகள் மட்டுமே தெரிகின்றன. இந்தச் சாலையை மூர்த்தி நகர் மற்றும் சோமசுந்தர நகரிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் 10 மீட்டருக்கு ஒரு இடத்தில் ரோடு கடுமையாக சேதம் ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் ரோட்டை பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறி விட்டது. பள்ளி வாகனம், இருசக்கர வாகனங்கள் விபத்துக்களைச் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகின்றது. மேலும் நடந்து செல்பவர்களின் பாதங்களை ஜல்லி கற்கள் பதம் பார்த்து விடுகின்றன. அவசரக் காலங்களில் பயன்படுத்தவே முடியாத சாலையாக உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தரமான தார்ச்சாலை அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.