பொன்னமராவதி, ஏப்.16: பொன்னமராவதி பகுதியில் சித்திரை பிறப்பை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு, பொங்கல் விழா, அன்னதானம் போன்றவை நடைபெற்றது. பொன்னமராவதி அமரகண்டான் குளத்தின் வடகரையில் உள்ள செல்வவிநாயகர் கோயிலில் வர்த்தகர் கழகம் சார்பில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. பாலமுருகன் கோயில், சிவன் கோயில், அழகியநாச்சியம்மன் கோயில், உடையப்பிராட்டி அம்மன் கோயில், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில், வையாபுரி பாலசுப்பிரமணியர் கோயில், தேனிமலை சுப்பிரமணியர் கோயில், காரையூர், மேலத்தானியம் மாரியம்மன் கோயில், அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கண்டியாநத்தம் புதுப்பட்டி செல்வ விநாயகர் கோயிலில் பொங்கலிட்டு, மாவிளக்கு வைத்தும், நூற்றுக்கணக்கணக்கான தேங்காய் உடைத்தும், குழந்தைகளுக்கு தொட்டில் கட்டியும் சித்திரைப்பிறப்பு விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. பெண்கள் கும்பியடித்தனர்.