செம்பட்டி, ஏப். 14: ஆலமரத்துப்பட்டியில் அங்கன்வாடி மையம் அருகேயுள்ள மாட்டு தொழுவத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சின்னாளபட்டி அருகே ஆலமரத்துப்பட்டி ஊராட்சி மில்கேட்டில் அங்கன்வாடி மையத்துடன் இணைந்து மாட்டு தொழுவம் உள்ளது.
தொழுவத்திலிருந்து வெளியேறும் கொசுக்கள், ஈக்கள் அங்கன்வாடி மைய குழந்தைகளை கடிக்கின்றன. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தவிர அங்கன்வாடி மையம் முன்பு வாகனங்களை நிறுத்துவதால் குழந்தைகள் விளையாட முடியாத நிலை உள்ளது. மேலும் கழிப்பறை வசதி இல்லாததால் குழந்தைகள் சிரமமப்பட்டு வருகின்றனர். இதனால் விரைவில் அங்கன்வாடி மையத்திற்கு பூட்டுப்போடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் ஆத்தூர் யூனியன் அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குழந்தைகள் நலன் கருதி அங்கன்வாடி மையம் அருகேயுள்ள மாட்டு தொழுவத்தை அப்புறப்படுத்த வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.