வேதாரண்யம், ஏப்.11: வேதாரண்யம் அடுத்த தகட்டூர் பைரவர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வேதாரண்யம் தாலுகா தகட்டூரில் பைரவர் கோயில் அமைந்துள்ளது. சிவபெருமான் எடுத்த 64 திருக்கோலங்களில் 38வது திருக்கோலம் பைரவர் ஆகும். வடக்கில் காசியிலும் தெற்கில் தகட்டூரிலும் மட்டுமே பைரவர் மூலவராக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதை முன்னிட்டு கொடிமரத்திற்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர், திரவியபொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்த தீபாராதனை நடைபெற்று பின்பு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நடைபெறும் விழா நாட்களில் சாமி குதிரை, ரிஷபம், கைலாச உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற உள்ளது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 19ம் தேதி மாலை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.