×

பெரும்புதூர் அருகே பரபரப்பு முதியவரை கொன்று கால்வாயில் சடலம் வீச்சு: கேமராவில் பதிவான மர்மநபருக்கு வலை

பெரும்புதூர், ஏப். 9: பெரும்புதூர் அருகே முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார், கேமரா காட்சியில் பதிவான மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.வேலூர் அடுத்த ஆற்காடு தாலுகா  ஊனைபள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (70). பெரும்புதூர் அருகே  சோமங்கலம் அடுத்த  புதுநல்லூர் பகுதியில் அமைந்துள்ள டைல்ஸ் கடையில், தங்கி காவலாளியாக வேலை செய்து வந்தார்.இந்நிலையில் கோவிந்தசாமி, புதுப்பேர் - அமரம்பேடு சாலையில் உள்ள கால்வாயில் நேற்று இறந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.தகவலறிந்து சோமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வந்து சடலத்தை கைப்பற்றி பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து  போலீசார் விசாரித்தனர்.

சடலம் கைப்பற்றப்பட்ட இடத்தின் எதிரே உள்ள ஒரு கடையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, நேற்று முன்தினம் இரவு சுமார் 1 மணியளவில் மர்மநபர் ஒருவர் கோவிந்தசாமியை சரமாரியாக தாக்கி, அந்த கால்வாயில் வீசியது பதிவாகி இருந்தது.இதையடுத்து போலீசார், கோவிந்தசாமியை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தார். கொள்ளை சம்பவத்தை தடுக்கும்போது, கொலை நடந்ததா அல்லது கொடுக்கல் வாங்கல் தகராறா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர். மேலும், கேமரா காட்சியில் பதிவான மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Perumbupur ,
× RELATED பெரும்புதூர் அருகே பரபரப்பு...