ஊட்டி, ஏப். 8: ஊட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் படுகர் இன மக்களின் சார்பில் ஹெத்தையம்மன் அலங்காரத்தில் தேர் பவனி இன்று (8ம் தேதி) நடக்கிறது. ஊட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஊட்டி மாரியம்மன் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒரு மாதம் நடக்கும் இத்திருவிழாவின் போது, ஒவ்வொரு சமுதாயத்தை சேர்ந்த மக்களும் தங்களது பாரம்பரிய முறைப்படி விழாக்களை நடத்துவர். ஒவ்வொரு நாளும் பல்வேறு அங்காலரங்களில் அம்மன் திருவீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலிப்பார்.
இதன்படி இந்த ஆண்டுக்கான மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் 15ம் தேதியன்று கணபதி ஹோமம், பூச்சொரிதல், நவகலச பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் விழா துவங்கியது. கடந்த 18ம் தேதியில் இருந்து பல்வேறு சமூகத்தார் சார்பில் நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் தேர்பவனி நடந்தது. இதன் ஒரு பகுதியாக படுகர் இன மக்களின் சார்பில் இன்று (8ம் தேதி) ஹெத்தையம்மன் தேர் பவனி நடக்கிறது. விழாவினை முன்னிட்டு படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.