செய்யாறு, ஏப்.8: செய்யாறு, செங்கம் அருகே தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இல்லாததால் ₹2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. செய்யாறு அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தில் நேற்று காலை, தேர்தல் பறக்கும் படை அலுவலர் சாரதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குப்பன் மற்றும் ேபாலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ₹80 ஆயிரம் பணம் இருந்தது. விசாரணையில், பைக்கில் வந்தவர் செஞ்சி அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்த தினேஷ், தனியார் கோழிப்பண்ணை நிறுவன ஊழியர் என்பதும், செய்யாறில் உள்ள கோழிப்பண்ணைகளில் வசூலித்த பணம் என்பதும் தெரியவந்தது. ஆனால், அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, உதவி தேர்தல் அலுவலர் ஆர்டிஓ அன்னம்மாளிடம் ஒப்படைத்தனர். அதேபோல், செங்கம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரி சத்யவாணி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு மேல்செங்கம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனையிட்டனர். வேனில் வந்தவர் திருவண்ணாமலையை சேர்ந்த பாலாமணி(58) என்பதும், உரிய ஆவணம் இல்லாமல் ₹1.20 லட்சம் பணம் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை தாசில்தார் பார்த்தசாரதியிடம் ஒப்படைத்தனர்.