திருச்செங்கோடு, ஏப். 5: திருச்செங்கோடு தொமுச அலுவலகத்தில், மத்திய தொழிற்சங்கங்களின், நாமக்கல் மாவட்ட கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலாளர் தனசேகரன், சிஐடியூ மாவட்ட செயலாளர் வேலுசாமி, ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் பழனிவேல், சிஐடியூ மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ், ஐயப்பன், தொமுச மாவட்ட நிர்வாகிகள் முத்துசாமி, சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தொழிலாளர் சட்டத்திருத்தம் என்ற பெயரால் 44 வகையான சட்டங்களை, நான்கு தொகுப்புகளாக சுருக்குவது, மோட்டார் வாகன சட்டத் திருத்தம், மின்சார ஒழுங்குமுறை சட்டம் போன்ற தொழிலாளர் விரோத சட்டங்கள் மற்றும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற மக்கள் விரோத கொள்கைகளை மத்தியில் ஆட்சி செய்த பாஜ அரசு அமலாக்கியது.
மேலும், ஜிஎஸ்டியை அமல்படுத்தி பாரம்பரிய குடிசை தொழில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை சீரழிக்கப்பட்டதுடன், கோடிக்கணக்கான மக்கள் தங்களின் வேலையை இழந்துள்ளனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சக்கணக்கான தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன. எனவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு பொதுமக்களிடம் பிரசாரத்தில் ஈடுபடுவது, அவரை வெற்றிபெறச் செய்வது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.