×

எழும்பூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு நீட், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு ஆகியவற்றை மனதில் வைத்து வாக்களியுங்கள்: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேச்சு

சென்னை: மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் ேநற்று வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டார். இதில் மாவட்டச் செயலாளர் சேகர்பாபு எம்எல்ஏ, எழும்பூர் எம்எல்ஏ கே.எஸ்.ரவிச்சந்திரன், எழும்பூர் தெற்கு பகுதி செயலாளர் விஜயகுமார், பகுதி மற்றும் வட்ட நிர்வாகிகள், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட  கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பிரசாரத்தின் போது தயாநிதி மாறன் பேசியதாவது:

கடந்த 2004ம் ஆண்டில் இளைஞர்கள் இன்ஜினியரிங் படித்தால் ரூ. 40 ஆயிரம் சம்பளம். இன்றைக்கு இளைஞர்கள் இன்ஜினியரிங் படித்துவிட்டு போனால் ரூ. 8 ஆயிரம் தான் சம்பளம். இந்த நிலை மாற வேண்டும். 8 வருடமாக அதிமுக அரசு வேலைவாய்ப்பு அளிக்கும் எந்த ஒரு நல்ல திட்டத்தையும் கொண்டு வரவில்லை. நம் மாணவ மாணவிகள் பலருக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்று ஆசை. நம்ம ஊரில் எல்லா மாணவர்களும் ஸ்டேட் போர்டில் படிக்கிறார்கள். இப்போ நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருக்கு நீ அதை படி, இரண்டு மாதம் இருக்கு அதற்குள்ளே நீ அதை படி என்று சொன்னார்கள், முடியுமா?. அரியலூரில் குக்கிராமத்தில் பிறந்து, பள்ளியிலே முதல் மாணவியாக வந்த அனிதா, நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் தற்கொலை செய்து கொண்டார். எண்ணிப் பாருங்கள் நீட் மட்டும் இல்லாதிருந்தால் இன்று அனிதா மருத்துவராக இருந்திருப்பார்.
இன்றைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறார், நாம் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம், அதேதான் ராகுல்காந்தியும் சொல்லியிருக்கிறார். நீட் தேர்வை கண்டிப்பாக ஒழிப்போம்.

சென்னையில் மட்டும் ரூ. 100 கோடி செலவில், நான் பங்குபெற்ற யு.பி.ஏ. அரசிலே கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொடுத்தோம். கலைஞர் அரசு பல திட்டங்களை உருவாக்கியது. அதன் பிறகு அதிமுக அரசின் சார்பில் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை, அதனால் தான் இன்று தண்ணீர் பிரச்னை. 8 வருடமாக இருக்கிற அதிமுக அரசு ஏதேனும் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளதா?. நீங்கள் குடங்களுடன் நிற்கின்ற நிலையயை பார்க்கும்போது எங்களுக்கு கண்டிப்பாக வருத்தமாக இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த தண்ணீர் பிரச்னையை நிரந்தரமாக போக்க கடல் நீரை குடிநீராக்கி அத்தனை பிரச்னைகளையும் தீர்ப்போம். உங்களுக்கு உழைப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பினைத் தாருங்கள், தாருங்கள், மறவாதீர் உதயசூரியன், பூத்துக்கு போங்க, முதல் பெயர் தயாநிதி மாறன், முதல் பொத்தான் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : price hike ,Dayanidhi Maran ,region ,Egmore ,Egamangur ,Central Chennai DMK ,
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...