கீழ்வேளூர், ஏப்.5: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த இலுப்பூர் சத்திரத்தில் காமராஜருக்கு மார்பு அளவு சிலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை நீதி மன்ற உத்தரவு என கூறி தேர்தல் நடத்தை விதி அமலில் இந்த நேரத்தில் வருவாய் துறை மற்றும் காவல் துறையை சேர்ந்தவர்கள் கடந்த வாரம் பொக்லைன் கொண்டு உடைத்து பின்னர் சிலை அமைக்கப்பட்டிருந்த பீடத்தையும் உடைத்தனர். இது காங்கிரஸ் கட்சி, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினருக்கும், பொது மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில் பனங்காட்டு மக்கள் கழக மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன், தரங்கம்பாடி பேரூர் இளைஞர் காங்கிரஸ் கட்சி தலைவர் சுதாகர், துணைத் தலைவர் ஆதித்தன் உள்ளிட்டோர் இலுப்பூர் சத்திரம் சென்று காமராஜர் சிலை உடைக்கப்பட்டதை பார்வையிட்டனர். பின்னர் பனங்காட்டு மக்கள் கழக மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன், நாகை நாடாளுமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாபுராமச்சந்திரனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:இலுப்பூர் சத்திரம் மெயின் ரோட்டில் கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வந்த பெருந்தலைவர் காமராஜர் சிலை மற்றும் மேடை இடிக்கப்பட்டுள்ளது.
சிலையை அகற்ற சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்காமலும், சிலையை அப்புறப்படுத்தி பாதுகாக்கப்படாமல் பொக்லைன் கொண்டு சிலை உடைக்கப்பட்டுள்ளது. காமராஜர் தமிழக முதல்வராக இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராகவும், இந்திய அரசியலில் கிங்மேக்கராகவும் இருந்துள்ளார்.தமிழகத்தில் கல்வி கண் திறந்த காமராஜர் பல்வேறு தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வர காரணமாக இருந்துள்ளார். இப்படிபட்ட தலைவர் சிலையை இயந்திரம் கொண்டு இடித்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதே இடத்தில் அரசின் சார்பில் காமராஜர் சிலையை அமைக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.