×

ஓ.பி.எஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜ. பெண் நிர்வாகியிடம் சில்மிஷம்

சூலூர். ஏப். 3: கோவை சூலூரில் ஓ.பி.எஸ் தேர்தல் பிரசார கூட்டத்தின் போது பா.ஜ பெண் நிர்வாகியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அதிமுக இளைஞருக்கு தர்மஅடி விழுந்தது. கோவை சூலூரில் தேர்தல் பிரசாரத்துக்கு நேற்று காலை 11 மணிக்கு வருவதாக கூறிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதியம் 12.30 மணிக்கு வந்தார். வெயில் தாங்க முடியாமல், பணம் கொடுத்து அழைத்து வந்த பலர் படாதபாடு பட்டனர். நீண்ட நேரம் காத்து கிடந்த பெண்கள், இயற்கை உபாதைகளுக்குகூட செல்ல முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாயினர். இந்நிலையில், துணை முதல்வருக்கு ஆரத்தி எடுப்பதற்காக பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவர் கையில் ஆரத்தி தட்டுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது பட்டாசு வெடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை பயன்படுத்தி, ஆரத்தி தட்டுடன் நின்றிருந்த பா.ஜ.க. பெண் நிர்வாகியிடம், சூலூர் 8 வது வார்டு பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. இளைஞர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டார். உடனே, அந்த பெண் நிர்வாகி,கடுமையாக எச்சரித்தார். அப்போது அவர், தெரியாமல் கை பட்டுவிட்டது எனக்கூறி சமாளித்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பெண் நிர்வாகி கூச்சல் போட்டார். இதையறிந்ததும், அருகில் இருந்தவர்கள் ஒன்றுசேர்ந்து, அந்த இளைஞரை புரட்டிஎடுத்தனர். தர்மஅடி கொடுத்து, கூட்டத்தைவிட்டு வெளியே தூக்கிப்போட்டனர். பின்னர், சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சூலூர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். துணை முதலமைச்சர் பிரசார கூட்டத்தில், அதிமுகவைசேர்ந்த இளைஞர் ஒருவர், கூட்டணி கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு, சிக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியது.

Tags : BJP ,election campaign meeting ,Silksham ,administrator ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...