திருத்தணி, மார்ச் 29: திருத்தணி நகர தேர்தல் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் இல்லாததால், அதிமுகவினர் ஆவேசம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளராக ஏ.கே.மூர்த்தி போட்டியிடுகிறார். இந்நிலையில் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தணி நகர தேர்தல் அலுவலகம் தணிகாசலம்மன் கோயில் அருகில் நேற்று காலை திறக்கப்பட்டது. அப்போது வைக்கப்பட்டிருந்த பேனரில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் இல்லை. இதை பார்த்த அதிமுகவினர், ‘‘தலைவர்கள் படங்களை புறக்கணித்துவிட்டு கட்சியின் பேனர் வைப்பதா?’’ என ஆவேசம் அடைந்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.அப்போது, அங்கிருந்த முக்கிய பிரமுகர்கள், பேனரை மாற்றிவிடுவதாக கூறினர். பின்னர், அனைவரும் சமரசம் செய்யப்பட்டனர்.
திறப்பு விழாவுக்கு வந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் சாலையில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தியதால் திருத்தணியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனால், சென்னை, வேலூர், திருவள்ளூர், ஆந்திரா மாநிலம், சித்தூர், திருப்பதி, காளகஸ்தி பகுதிகளுக்கு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால், வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி தவித்தனர்.இதைத்தொடர்ந்து வாஸ்துபடி கொண்டாபுரம் பொன்னியம்மன் கோயிலுக்கு, திருத்தணி உபகோயிலான சுந்தர விநாயகர் கோயில் குருக்களை வரவழைத்து சிறப்பு பூஜை செய்து, ஏ.கே.மூர்த்திக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினர்.பிரசாரத்தின்போது விதி மீறி 20க்கும் மேற்பட்ட கார் மற்றும் 50க்கும் மேற்பட்ட பைக்குகளுடன் இசை வாத்தியம் முழங்க வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.