ஊட்டி, மார்ச் 28: ஊட்டி அருகே முத்தோரை பாலாடா பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. முத்தோரை பாலபாடா உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சுகாதார நிலையத்திற்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், இரவு நேரங்களில் இந்த சுகாதார நிலையத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாத நிலையில், சுகாதார நிலை வளாகத்தை குடிமகன்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி கொண்டு வந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் மது குடித்து விட்டு செல்வதும், பாட்டில்களை அங்கேயே வீசி விட்டு செல்வதும் தொடர் கதையாக உள்ளது.
இதனால், அங்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு தொல்லைகள் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை சுற்றிலும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.