×

பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம் செயல்படாமல் இருக்கவா செலவு செய்தீர்கள்? அம்பாத்துரை பெண்கள் கேள்வி

செம்பட்டி, மார்ச் 26: அம்பாத்துரையில் செயல்படாமல் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சின்னாளபட்டி அருகே அம்பாத்துரையில் மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. செம்பட்டி சாலையில் உள்ள இந்த சுகாதார வளாகம் பெரும்பாலும் செயல்படாமலே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் 14வது மானிய நிதியில் இந்த சுகாதார வளாகம் ரூ.1 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டது. அதன்பின்பும் செயல்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் பெண்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெரும்பாலும் இரவுநேரங்களிலே செல்வதால் விஷஜந்துகளின் அச்சமும் உள்ளது. மேலும் இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை சுகாதார வளாகத்தை திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், ‘பூட்டியே கிடந்த மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்கிறேன் எனக்கூறி அரசு பணம் ரூ.1 லட்சத்தை வீணடித்து விட்டனர். சுகாதார வளாகம் செயல்படாமல் இருக்க எதற்கு செலவு செய்ய வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுகாதார அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : stay ,Women ,health care camp ,
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது