பெரம்பலூர், மார்ச் 12: பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்த விதிமுறை மீறி ஆவணங்களின்றி எடுத்து சென்றதால் 6 பேரிடம் ரூ.8.44 லட்சத்தை கண்காணிப்பு குழு பறிமுதல் செய்தது. பெரம்பலூரில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சாந்தா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி, குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு தனித்தனியே 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்ட நிலையான கண்காணிப்பு குழுவால் பெரம்பலூர் 4 ரோடு (2பேர்) மற்றும் அன்னமங்கலம் பிரிவுரோடு பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 3 பேரிடம் ரூ.6.30 லட்சமும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்ட நிலையான கண்காணிப்பு குழுவால் திருமாந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2,14,490 என மொத்தம் ரூ.8,44,490 மதிப்பிலான ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட தொகைக்கு சம்மந்தப்பட்ட நபர்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தால் திட்ட இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள், ஆவணங்களை பரிசீலனை செய்து பணத்தை திரும்பி வழங்கும் என்றார்.