புழல்: புழல் அடுத்த சோழவரம் அருகே பாடியநல்லூரில் செயல்பட்டு வரும் அலுமினிய உருக்காலையை மூட வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பாடியநல்லூரில் அலுமினிய பொருட்களை உருக்கி மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் அதனை மூட வலியுறுத்தி பொதுமக்கள் பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். மேலும் தொழிற்சாலை கழிவுகளால் சுவாச கோளாறு, சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், குடிநீர் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு வந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத்தொடர்ந்து கலைந்து சென்றனர்.