×

முத்துப்பேட்டை அருகே மேய்ச்சலுக்கு சென்ற 11 ஆடுகள் மர்ம சாவு விஷம் வைத்து கொல்லப்பட்டனவா? போலீஸ் விசாரணை

முத்துப்பேட்டை, மார்ச் 8:   முத்துப்பேட்டை அடுத்த கரையங்காடு கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள் அழகேசன் மனைவி செல்வி, ரவி மனைவி பிரேமா, பாலராமன் மகன் அன்பழகன். இவர்களுக்கு சொந்தமான 11 ஆடுகள் நேற்று வழக்கம்போல் அவர்களது வீட்டிலிருந்து மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடப்பட்டது. இந்நிலையில் அதே பகுதியில் உள்ள சுந்தரம் மகன் வீரசிங்கம் என்பவரது தோப்பில் அந்த 11 ஆடுகளும் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதனை கண்ட ஆடுகளின் உரிமையாளர்களும், கிராம மக்களும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 இந்நிலையில் அழகேசன் மனைவி செல்வி முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆடுகளுக்கு யாரேனும் திட்டமிட்டு விஷம் வைத்து கொன்றார்களா? அல்லது அதே பகுதியில் உள்ள அசுத்தமான குட்டையில் தண்ணீர் குடித்து இறந்து விட்டதா? குட்டை தண்ணீரில் யாரேனும் விஷம் கலந்தார்களா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆடுகளை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக இடும்பாவனம் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : deaths ,Muthupettu ,Police investigation ,
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை