×

அதிரடி அதிகாரியால் ‘வட’ போச்சே என்று புலம்பும் ஊழியர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘காவல் துறை அதிகாரியையே கலங்கடித்த பெண்ணை நினைத்து சிரிப்பதா…’’ என்று சொல்லிவிட்டு சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘தக்கலை காவல் நிலையத்தில், புகார் மனு தொடர்பாக பெண் ஒருவரை அழைத்து எஸ்.ஐ ஒருவர் விசாரணை நடத்திக்கொண்டிருந்தார். விசாரணைக்கு வந்த பெண் கையில் செல்போனுடன் இருந்தார். அவர் அதனை தனது கைபையுடன் செல்போனை சேர்த்து பிடித்திருந்தார். ஆனால் எஸ்ஐ விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் விசாரணை முழுவதும் அந்த பெண்ணின் செல்போனில் படம் பிடிக்கப்பட்டுக்கொண்டு இருந்தது. இதனை பார்த்த அருகில் இருந்த ஏட்டு ஒருவர், நிலைமையை எஸ்.ஐ.க்கு உணர்த்தியுள்ளார். உடனே சுதாரித்த எஸ்ஐ, அவரது செல்போனை வாங்கி பார்த்துள்ளார். அப்போது அங்கு நடந்த விசாரணை முழுவதும் படம்பிடிக்கப்பட்டு இருந்தது. அதனை தெரியாமல் செய்துவிட்டேன் என்று அந்த பெண் கூறினாலும் அங்கிருந்த எஸ்ஐ உள்ளிட்ட போலீசார் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லையாம். ஒரு சாதாரண விசாரணையையே செல்போனில் பதிவு செய்யும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது என்று எண்ணிய அவர், இவற்றை தடுக்க என்ன செய்வது என்று இப்போது ஒட்டுமொத்த ஸ்டேஷனும் ஆலோசித்துக்கொண்டு இருக்கிறதாம்… மேலும் அதில் இருந்த காட்சிகளை டெலிட் செய்த போலீசார், அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பினாங்களாம்… இப்போது போலீஸ் நிலையத்தில் உஷாராக விசாரணை செய்யும் லட்சணம் இப்படி தான் இருக்கு…’’ என்றார் விக்கியானந்தா.‘‘இலையால் வளர்ந்தவர்… அதன் தலைமையால் செழுமையில் இருப்பவர் அதன் அடிமட்ட தொண்டர்களை அலட்சியமாக நடத்துகிறாராமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கங்கை  பெயரில் துவங்கும் மாவட்டத்தின், ‘‘மரியாதை’’ சட்டமன்ற தொகுதியில் ‘‘இலைக்கட்சி’’யில் போட்டியிட்டு தோற்றவர் மிஸ்டர் பியூட்டி. இவர் கட்சித்தொடர்பாளர் பொறுப்பிலும் இருக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கடும் முயற்சி எடுத்து, கட்சியில் ‘சீட்’ வாங்கி போட்டியிட்டு ஒத்துழைப்பு, ஆதரவின்றி தோற்றுப்போனார். இதைத்தொடர்ந்து, கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இவர் தலை காட்டுவதில்லை. தொகுதிக்குள் வந்து போவதும் தெரியாது. இந்நிலையில் தொகுதியின் சொந்த ஊருக்குள் தனது வீட்டிற்கு வரும்போது, ஒரு சில கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இவரைச் சந்தித்து கட்சி தொடர்பாக பேசினால், ‘‘அதுபத்தி எல்லாம் பேச வேண்டாம்.. அதுக்காக இங்கே யாரும் வரவேண்டாம்’’ என்று பேசி அனுப்பிவிடுகிறாராம். ‘‘என்னங்க இது. பொறுப்புல இருக்குற கட்சிக்காரருன்னுதானே தேடி வர்றோம். இப்படி வார்த்தையாலேயே அடிச்சு விரட்டுனா எப்படிங்க என்று நிர்வாகிகளும், தொண்டர்களும் கேள்வி எழுப்புகிறார்கள். அத்தோடு, கட்சி நிர்வாகிகள் பற்றி எதாவது புகார் தெரிவித்து, சரிசெய்ய சொன்னால் அதுசம்பந்தமாக வருபவரையும், ‘‘யாரையும் குறை சொல்லிக்கிட்டு வர வேணாம், இங்கே யாருதான் சுத்தங்க’’ என்று கோபத்தோடு கர்ஜித்து கேள்வி எழுப்புகிறாராம். இலை கட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி இவரு நிலைமை என்ன.. இப்போது மாடியில இருந்து குடிசையை பார்க்கிற மாதிரி… இலையால் வளர்ந்தவரு இலை நிர்வாகிகளை இளிச்சவாயனாக பார்க்கிறார் என்று கட்சியினர் புலம்புறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புதுசா வந்த அதிகாரியால கோவை மாநகராட்சியின் பெயரே மாறிப்போச்சு… இப்படி நடக்கலாமா’’ என்று நக்கலடித்தார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சி கமிஷனராக ராஜவானார் பதவி ஏற்றது முதல் தனது அதிரடியை தொடர்கிறார். தினமும் அதிகாலை 5.30 மணிக்கு எழுந்து, 6 மணிக்கு மாநகர வீதிகளில் ஆய்வுப்பணியை துவக்கி விடுகிறார். காலை 9.30 மணி வரை இப்பணி நடக்கிறது. இதன்பிறகு, வீட்டுக்கு சென்று, குளித்து ரெடியாகி, காலை 10.30 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள தனது இருக்கையில் வந்து அமர்ந்துவிடுகிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வார்டுக்கு விசிட் அடிக்கிறார். தார்ச்சாலை, சாக்கடை கால்வாய், பாதாள சாக்கடை பணி, தெருவிளக்கு, சிறுவர் பூங்கா, மாநகராட்சி பள்ளி கட்டிடம், மாநகராட்சி சமுதாய நலக்கூடம், கொரோனா பரிசோதனை முகாம், கொரோனா தடுப்பூசி முகாம், வீடு வீடாக சென்று கொரோனா பாதிப்பு கணக்கெடுக்கும் பணி, குடிநீர் விநியோகம், கட்டிட பிளான் அப்ரூவல், சொத்து வரி விதிப்பு என ஒன்று விடாமல், தட்டி எடுத்து விடுகிறார். புதிதாக கட்டப்பட்ட கட்டிடம், புதிதாக போடப்பட்ட தார்ச்சாலை ஆகியவற்றை ஆய்வு செய்வதுடன், சாம்பிள் எடுத்து, பரிசோதித்து பார்க்கிறார். டெண்டர் எடுக்கும்போது குறிப்பிடப்பட்ட சாராம்சம், கட்டுமான பணியில் இருக்கிறதா என ஒப்பிட்டு பார்க்கிறார். இதில், தில்லாலங்கடி வேலை நடந்திருப்பது தெரியவந்தால், பில் தொகை கொடுப்பதை நிறுத்தி வைத்து விடுகிறார். இவரது அதிரடியால், ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி, மாநகராட்சி அதிகாரிகள் பலரும் கலங்கிப்போய் உள்ளனர். இதுக்கு முன்னாடி கோவைக்கு வர அதிகாரிகள் போட்டி போடுவாங்க… வந்த வேகத்துல ஒரு பங்களாவை கட்டி செட்டிலாகிடுவாங்க.. ஆனால், புது அதிகாரி ஒரு செங்கல்லை கூட எடுத்தால் கண்டுபிடித்து சஸ்பெண்ட் செய்துவிடுவார் போலிருக்கே என ஊழியர்கள் புலம்புறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கோவை காக்கியின் பரிதாப நிலையை கேட்டதும் கண்கலங்குகிறதே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவை மாவட்டத்தில் கூடுதல் எஸ்பியாக இருந்த 3 எழுத்து அதிகாரி, வாக்கிங் சென்றபோது ஒரு காவலரை தாக்கினாராம். இந்த விஷயத்தை அந்த பகுதியிலேயே அமுக்கி விட்டார்களாம். இந்த சம்பவம் குறித்து பீட்டர் மாமாவில் செய்தி வெளியானது. இதுகுறித்து விசாரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டாராம். விசாரணையில் தினகரன் செய்தி உண்மை என்று தெரிந்ததால், உடனடியாக அவரை திருநெல்வேலிக்கு தூக்கியடித்து விட்டாராம். டிஜிபியாக சைலேந்திரபாபு பதவி ஏற்ற பிறகு அவர் எடுக்கும் அதிரடிக்கு காவலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளதாம். தற்போது காவலரை தாக்கிய அதிகாரியை மாற்றியதன் மூலம் காவலர்கள் சைலேந்திரபாபுவை வெகுவாக பாராட்டுகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post அதிரடி அதிகாரியால் ‘வட’ போச்சே என்று புலம்பும் ஊழியர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : wiki ,Peter ,Takkalai Police Station ,
× RELATED ஆடு திருடிய வாலிபர் கைது