×

மின் இணைப்பு கொடுப்பதற்கு தாமதம் மின்வாரிய பொறியாளரை கண்டித்து போராட்டம் நடத்த மக்கள் முடிவு

கும்பகோணம், மார்ச் 7: மின் இணைப்பு கொடுப்பதற்கு காலதாமதம் செய்யும் மின்வாரிய பொறியாளரை கணடித்து போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தின்கீழ் சுந்தரபெருமாள்கோயில், ஆரியப்படையூர், திருவலஞ்சுழி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள், புதிய மின் இணைப்பு பெறுவது, பில் கட்டுவது உள்ளிட்ட அனைத்து மின் சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு உதவி மின் பொறியாளர் அலுவலகத்துக்கு சென்று வந்தனர். இந்நிலையில் தற்போது உதவி மின் பொறியாளராக இருப்பவர் புதிய இணைப்பு, புதிய மின்கம்பம் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் காலதாமதப்படுத்தி வருகிறார். எனவே பட்டீஸ்வரம் பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் மின் இணைப்புகளை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பட்டீஸ்வரத்தை சேர்ந்த பஞ்சாபிகேஷன் கூறுகையில், புதிதாக வீடு கட்டுவதற்கு மின்சார இணைப்பு வழங்க வேண்டுமென கடந்த 3 மாதத்துக்கு முன் பட்டீஸ்வரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தேன். இடத்தை பார்த்துவிட்டு வந்த அதிகாரி, மின் கம்பம் பதிக்க மின்வாரியத்துக்கு ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றார். பணம் கூடுதலாக இருக்கிறது என்று கும்பகோணத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் புகாரளித்தேன். அவர்கள் வந்து பார்த்து விட்டு ரூ.24 ஆயிரம் செலுத்தினால் போதும். கும்பகோணம் அலுவலகத்தில் பணத்தை செலுத்துங்கள் என்றனர். இதனால் ஆத்திரமடைந்த பட்டீஸ்வரம் மின்பொறியாளர் அதிகாரி, மின்கம்பம் பதிக்காமல் அலைகழித்து வருகிறார். இதுபோல் ஏராளமானோர் விண்ணப்பம் கொடுத்து காத்திருப்பதால் கலெக்டர், மின்சாரத்துறை அமைச்சருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பம் கொடுத்து காத்திருக்கும் மக்களுக்கு மின் இணைப்பு, மின் கம்பத்தை அமைக்காவிட்டால் கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார். இதுகுறித்து பட்டீஸ்வரம் உதவி மின் பொறியாளர் கீதா கூறுகையில், பஞ்சாபிகேஷன் பணம் செலுத்தி 10 நாட்களாகிறது.  இவருக்கு முன் 2 பேர் பணம் செலுத்தி காத்திருக்கின்றனர். முன்னுரிமை அடிப்படையில் மின்கம்பம் அமைக்கப்படும் என்றார்.

Tags : electrician engineer ,protest ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...