பந்தலூர், மார்ச் 6:பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் விழா மேடை அமைப்பதற்கு பூமி பூஜை நேற்று நடந்தது. சேரம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 270 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்கள் தங்களுடைய திறன்களை பள்ளி விழாக்களில் வெளிப்படுத்துவதற்கு விழா மேடை இல்லாமல் இருந்து. இதனால் பள்ளி விழாக்களை முறையாக நடத்த முடியாமல் சிரமப்பட்டனர். இந்நிலையில் கடந்த 1998ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன் பள்ளி வளாகத்தில நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கு விழா மேடை அமைத்து தருவதாக முன்னாள் மாணவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி நேற்று முன்னாள் மாணவர்கள் சார்பில் சுமார் இரண்டரை லட்சம் மதிப்பீட்டில் விழா மேடை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார் நிர்வாகிகள் சார்லஸ், பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பீட்டர் வரவேற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர்கள் ராஜ்குமார், குறியகோஸ், அனிபா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) சேதுபாய் மற்றும் ஆசிரியர்கள். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிழ்செல்வன், வியாபாரிகள் சங்க தலைவர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக முன்னாள் மாணவர் பழனிச்சாமி நன்றி கூறினார்.
