×

ஆதாருக்காக பல மணிநேரம் காத்திருப்பு தினமும் அவதிப்படும் பொதுமக்கள்

ராமநாதபுரம், பிப்.27: அனைத்து அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்திற்கும் ஆதார் கார்டு இல்லாமல் ஒரு பணிகளும் நடைபெறாது என்ற நிலை உள்ளது. ஆதார் கார்டுகள் எடுக்க, புதுப்பிக்க ஆதார் மையங்கள் குறைவாக உள்ளதாகவும், மேலும் சர்வர் கோளாறு ஏற்படுவதால் தினமும் அலைவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆதார் எண் தொடர்பான பெயர் நீக்கம், மாற்றம், செல்போன் எண் இணைத்தல், புதிதாக எடுக்க ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. அரசு வேலை நாட்களில் ஆதார் கார்டு தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது 5 பேர் மட்டுமே நிற்கும் சிறிய அளவிலான அறையில் செயல்பட்டு வருவதால், மக்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் இப்பணிக்காக ஒருவர் மட்டுமே உள்ளார்.

புகைப்படம் எடுத்தல் கம்ப்யூட்டரில் பெயர் முகவரி விபரங்களை டைப் செய்து முடிக்க ஒரு நபருக்கு 20 நிமிடத்திற்கு மேல் ஆவதாக தெரிவிக்கின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அனைத்து அலுவலகங்களில் ஆதார் கட்டாயம் என்ற நிலையில் அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய அங்குள்ள ஆதார் மையத்தை நாடி வருகின்றனர். ஆதார் கார்டு சரி செய்யவே பல மணி நேரமாகின்ற நிலையில் மற்ற பணிகள் பாதிக்கப்படுவதாக காத்திருக்கும் பெண்கள் தெரிவித்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆதார் மையத்திற்கு கூடுதலான அறைகள், பணியாளர்களை நியமித்து பொதுமக்களை காத்திருக்க செய்யாமல் விரைவாக பணிகள் நடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Adoor ,
× RELATED சிறுமிகளை பலாத்காரம் செய்த...