விருத்தாசலம், பிப். 14: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இதில் பெண்ணாடம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் உள்ள சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள இறையூர், கொத்தட்டை, பின்னேரி, பொன்னேரி, மாளிகைகோட்டம், சவுந்திரசோழபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமின்றி நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள், தினந்தோறும் சிறுநீர், ரத்தம் உள்ளிட்ட சோதனைக்காக வருகின்றனர்.
அப்போது பரிசோதனைக்காக சிறுநீர் எடுப்பதற்கு, கழிவறையில் போதிய வசதி இல்லாததாலும், இருக்கின்ற ஓரிரு அறைகளில் கூட தண்ணீர், கதவு இல்லாததால் தவித்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை மருத்துவரிடம் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக சிகிச்சைக்கு வருபவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கழிவறை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.