மன்னார்குடி, பிப். 12: மன்னார்குடி ஒன்றியம் மூன்றாம் சேத்தி ஊராட்சியில் சேதமடைந்திருந்த 11 அரசு தொகுப்பு வீடுகள் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் தலா ரூ 50 ஆயிரம் மதிப்பில் சீரமைக்கப் பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப் பட்டது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் தமிழகம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்த அரசு தொகுப்பு வீடுகளை தலா ரூ 50 ஆயிரம் மதிப்பில் பழுது பார்த்து சீரமைத்து தர படும் என அறிவித்திருந்தார்.இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியத்தில் கடந்த நவம்பர் மாதம் 15 ம் தேதி அடித்த கஜா புயலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
குறிப்பாக அரசு தொகுப்பு வீடுகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. அந்த வகையில் ஒன்றியம் முழுவதும் உள்ள 51 ஊராட்சிகளில் 27 ஊராட்சி களில் சுமார் 280 அரசு தொகுப்பு வீடுகள் சேதமடைந்தன. இவற்றை அரசு உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட 3ம் சேத்தி, வடபாதி, மறவாக்காடு, கர்ணாவூர், திருராமேஸ்வரம் உள்ளிட்ட 27 ஊராட்சிகளில் சேதமடைந்த சுமார் 280 அரசு தொகுப்பு வீடுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப் பட்டது. இப்பணிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி கலைச் செல்வன், வட்டார வளர்ச்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் தலை மையில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட மூன்றாம் சேத்தி ஊராட்சியில் சேதமடைந்திருந்த 11 அரசு தொகுப்பு வீடுகள் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கலைச்செல்வன் தலைமையில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கணேஷ் குமார் மேற் பார்வையில் தலா ரூ 50 ஆயிரம் மதிப்பில் சீரமைக்கப் பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப் பட்டது.